2012 - LoveNeT.com
Headlines News :
WWLCOME THIS MY SITE

இயற்கை

Written By KAJANTHAN JS on Thursday 12 January 2012 | 07:14


இயற்கை எழுதிய கவிதையில்
எழுத்துப்பிழைகள்
திருநங்கைகள்
உணர்த்தியது
பசியின் கொடுமை
நோன்பு
வக்கிரம் வளர்க்கும்
வஞ்சனைத் தொடர்கள்
தொலைக்காட்சிகளில்
அன்று இலங்கை கொடூரனுக்கு
இன்று இந்திய வில்லிக்கு
புற்றுநோய்
ஆணி அடித்து
ரணப்படுத்தி விளம்பரம்
சாலையோர மரங்களில்
படமே இல்லை
உதவியது விளம்பரம்
முன்னாள் நடிகைக்கு
புகைப் பிடிக்கின்றதோ ?
மலை
வான் மேகம்
கண்ணால்
காண்பதும் பொய்
மலையை முத்தமிடும் வானம்
ஒழித்து விடு
பொன்னாசை பட்டாசை
நிரந்தரம் நிம்மதி   
 
விரயமாவதைப் பயன்படுத்திடு
விவேகமாக வளரந்திடு  
சூரிய சக்தி.

தென்றல்


விரைந்து சென்றது காற்று
வேகத் தடை போட்டது இயற்கை
தென்றல்
காதலின் ஆரம்பித்தது
கடைக்கண்ணால் அவள் பார்வை
தென்றல்
களைத்து வீடு சென்றேன்
அரிதாய்க் கிடைத்தது இன்சொற்கள்
தென்றல்
கதிரவனின் கோபம்
காற்றின் கருணை மனு
தென்றல்
கட்டில் முழக்கம் ஒலிக்கிறது
முத்தத்தோடு அணைப்பு
தென்றல்
பிள்ளைகள் வெய்யிலில்
இயற்கை அன்னையின் முத்தம்
தென்றல்
பிளவு பட்டது நம் இனம்
ஒன்று பட்டு வாழ்ந்தால்
தென்றல்.

அன்பிருக்கா இல்லையா ?




ஆண்: கண்டும் காணாம
             பாசாங்கு செய்யுற

பெண்: உனை காண உன்தெருக்கு
              வந்தும்மா என்னை புரியல

ஆண்: பார்த்தும் பாக்காம
             தவிக்க வைக்கிற

பெண்: நீ இருக்கும் இடமெல்லாம்
             வந்தும்மா அறிய முடியல

ஆண்: ஓரக்கண்ணால் பார்த்து
               உயிர எடுக்குற

பெண்: கண்சாடை காட்டியும்
              அத படிக்க தெரியல

ஆண்: கவனத்த ஈர்த்து
             கவர்ந்து கொல்லுற

பெண்: நீ பாக்குறப்போ கொளந்தைய
              கொஞ்சினேன் அதுகூட புரியல

ஆண்: அன்பிருக்கா இல்லையா
             அறிய முடியல

பெண்: உங்கம்மாவ அத்தேன்னு
              கூப்பிட்டும்மா அன்பு புரியல

உயிர் வாழ வழியிருக்கா ?




ஓடி பிடுச்சு வெளையாடி
விழுந்து உராய்ந்த புண்ணுக்கு
எச்சிமண்ண உனக்கு தடவுனப்ப
கொஞ்சம் மனசும் சேர்ந்து வந்திருச்சு

ஊர்க்கருப்புக்கு யாரோ ஒடச்ச
செதறு தேங்காசில்லுல ஒட்டுனமண்
ஊதி உனக்கு கொடுத்தப்ப
கொஞ்சம் உசிரு ஒட்டிகிட்டு வந்திருச்சு

கஞ்சி காச்சி வெளையாண்ட
கதவு இல்லாத வீட்டுக்குள்ள
ஒன் காலடித்தடம் பதிச்சப்ப
கொஞ்சம் உறவும் கூட வந்திருச்சு

சாமி ஊர்சுத்தி வந்தப்ப
மாவிளக்கு வெளுச்சத்துல மங்கலா
ஒன் மொகம் பாத்தப்ப
கொஞ்சம் கிறுக்கும் பிடுச்சு போச்சு

பச்சஓல இடுக்கு வழி
ஒன் கண்ண பாத்தப்ப
மிச்சம் மிதம் இருந்த
கொஞ்சம் நஞ்சம் உசிரும் போயிருச்சு

உயிர் வாழ வழியிருக்கா ?
நீ வந்துசேர மனமிருக்கா ?
வெறும் கூடுதான் இங்கிருக்கு
கொஞ்சம் கொஞ்சமா போனதெல்லாம்
கொண்டு வந்து சேப்பியா ?

நானும் காதலும்

Written By KAJANTHAN JS on Tuesday 10 January 2012 | 17:23




காதல்,ஒரு அழகான சொல். காதல் செய்ய பணமோ,அழகோ,அறிவோ தேவை இல்லை.உண்மையை சொல்ல போனால், அறிவு சற்று கம்மியாக இருப்பது அதிக பலனை தரும்.காதலை நான் அனுபவித்தது இல்லை.அனுமானித்தது உண்டு.

எனக்கும் சில சமயங்களில் காதல் வரும்,உற்று நோக்கினால்(நோக்கினாள் அல்ல) அவை எல்லாம் உண்மையான காதல் அல்ல ,ஒரு affection (இனக்கவர்ச்சி) அவ்வளவு தான்.
ஏன்? காரணங்கள் எளிது,ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை பிடிக்கும் (அல்லது ) ஒரு மாதத்திற்கு ஒரு பெண்ணை பிடிக்கும்.பெண் தோழிகள் என்று எடுத்து கொண்டால்,ஒரு நான்கு வரலாம்.அதுவும்,மாதத்திற்கு ஒரு முறை பேசுவேன் அல்லது அதுவும் பேச மாட்டேன். இவர்கள் அனைவரும்,என்னை மிக நீண்ட நாட்களாய் தெரிந்து(வருட கணக்கில்) ,பின் தோழி ஆனவர்கள்.

நான் ஏன் இப்படி ஆனேன்? நான் ஆணாதிக்க வெறி பிடித்தவனா?. ஆம் - இல்லை

உயர்நிலை  நாட்கள் - சிறு வயதில்,பள்ளி பருவத்தில் ஒரு பெண் மீது ஈர்ப்பு இருந்தது(வழக்கமான கதை தான் ). கதாநாயகன் வந்தான்,கதாநாயகியை கவர்ந்தான்,நான் வில்லன் ஆனேன்.அது தோற்று போனதில் காதலின் எதிரி ஆனேன்.படிப்பில் முதல் இடம் (அல்லது முதல் மூன்று இடங்களுக்குள்) மற்றும் துணைக்கு என் அப்பா நான் படித்த பள்ளியின் ஆசிரியர்.இது போதாதா காதலின் எதிரியாக???

மேல் நிலை நாட்கள் - மேல் நிலை படிப்பிற்காக விடுதிக்கு போனேன்.அது ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளி.பொண்ணுங்க,பசங்க பாக்க கூடாது,பேசக்கூடாது னு சொன்னங்க.அவங்க சொன்னதில்,நான் பின்பற்றிய ஒரே கருத்து இது தான். பேச்சு போட்டியில் ,பள்ளி எங்கும் என் புகழ் பரவி,மேலும் சில பல சித்து வேலைகள் செய்து,கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, படிப்பை மறந்து திரிந்த காலம்.இந்த காலங்களில் நான் இரண்டு பெண்களிடம் பேசி இருக்கிறேன். பேசியது இது தான்.உங்க ரெகார்ட் நோட் குடுங்க,மிஸ் மார்க்கை கூட்டி சரி பார்க்க சொன்னாங்க..அதற்கு மேல்,எதுவும் நியாபகம் இல்லை.

நான் பெரும்பாலும்,என் நெருங்கிய நண்பர்கள் உட்பட,வாங்க-போங்க என்று  தான் கூப்பிடுவேன்.இதை பலரும் விரும்புவது கிடையாது.
கல்லூரி நாட்கள் - பெண்களிடம் பேசியது குறைவு என்பதால்,ஒரு தயக்கம் இருந்தது.இதற்குள் எனது நண்பர்கள்,அனைத்து வாய்ப்பையும் அணைத்து விட்டார்கள். மேலும்,திருமலை என்ற பெயரால் ரோல் நம்பர் - 52 ,எந்த பெண்ணும் t ,u,v,w ,x ,y ,z  என்ற பெயரில் வராததால் 50 - 60  அனைவரும் மாணவர்கள்.
வழக்கம் போல,internal டெஸ்டில் 50 - 60 ரோல் நம்பர் ஆன  நாங்கள் எல்லாம் பெயில் ஆக,வந்தது வினை.நிறைய பேர் பெயில் ஆகி இருந்தாலும்,நாங்கள் மட்டும் ரவுடி கும்பல் எனப்படும் "v" குரூப் ஆனோம்.(50 - 60   ரோல் நம்பர் ல் , 7 மாணவர்கள் "v" யை ஆரம்பமாக கொண்டவர்கள்).எங்களை கண்டால் எல்லாரும் கதறுவார்கள்.நான் இந்த சங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தேன்.இந்த சங்கம்,பகலில் சிங்கமாகவும்,இரவில் பெண்களின் செல் சங்கமம் ஆகவும்  இருந்தது,பின் நாளில் தான் தெரிய வந்தது.
இதனால் கல்லூரியில் என் காதல் "லேது,நகி ,இல்லை,மபி". 

வேலை நாட்கள் - 
ஒரு பெண் அதியசம் ஆக chat ல் வந்தது ,ஸ்கூல் பிரண்ட் என்றது.
அடுத்த நாள் காலை,"hi da " என்றது,நான் உடனே,"hi di " என்றேன்.அவ்வளவு தான் ,என்னை பிளாக் பண்ணிவிட்டது(block தான் ,blog அல்ல) .
நண்பனிடம்,கேட்டால்,ஐயோ,இதெல்லாம் பன்ன பிடாது என்றான்.

இதை எல்லாம் படித்து விட்டு,ஒரு பேக்கு,சோடாபுட்டி கண்ணாடி,படிந்த எண்ணெய் போட்டு வாரிய தலை,தொள தொள சட்டை,பேண்ட்  என்று உருவம் செய்தால் ,அது தான் நான் - க. திருமலை. பாஸ்போர்ட்,விசா ,கிரெடிட் கார்டு,பான் கார்டு,லைசென்ஸ் என்று எல்லாவற்றிலும் தன் தமிழ் பெயரை முழுதாய் எழுதி, கையெழுத்து என்று சொல்லி,பலரை அலற (அழ) வைத்தவன்.

நான் காதல் வயப்படா காரணம்,
 

1 . பெண்களை மதிக்காமல் ,அதிகமாய் நக்கல் செய்வது.அதிகமான பேச்சு.
2 . பெண்களிடம் ம்,ம் என்று அரை மணி நேரம் சொல்ல ,பொறுமை இல்லாமை. சாப்டியா?,தூங்கினியா? என்றெல்லாம் சொல்லாதது.
3 . வாங்க,போங்க என்று நான் சொல்லுவதால்,நான் சின்னப்பையனாக ஆகி ,அவர்கள் அக்கா ஆவதாக எண்ணி அரண்டு போய் ஓடி போனது.
4 . ஜாதி பிரச்சனை - நான் பாட்டுக்கு,கல்யாணம் பண்ணி கொண்டு போனால் ,கிராமத்தில் இருக்கும் என் பெற்றோரை நேரடியாய் பாதிக்கும் என்று எண்ணியது.முக்கியமாய் ரெண்டு பக்கமும் அடி பின்னிடுவாங்க என்ற பயம்.
5 . ஹீரோ என்று எண்ணி பல செயல்கள் செய்து காமெடியன் ஆனது.
6 . சம வயது பெண்களிடம் பழக  அதிக வாய்ப்பு இல்லாமை.அக்கா,தங்கை இல்லாமை.வீட்டில் ஒரே பையன்-தனிக்காட்டு ராஜா எல்லாம் கிடையாது.
எங்கம்மாவிடம் - தினமும் அடி வாங்குவேன் சிறுசாய்,
அப்பாவிடம் - எப்பவாவது வாங்குவேன் பெருசாய் . 


இப்படி எல்லாம் நான் காரணங்கள் சொன்னாலும்,உண்மை இது தான்.
எனக்கு காதலிக்க வாய்ப்பு வரவில்லை.வாய்ப்புகளை உருவாக்க தெரியவில்லை.காதலிப்பவர்கள் காதலில் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.

உன்னால் ஏன்...




காதலி ஏன் என்னை விட்டு பிரிந்தாய் என்று 
என்னக்கு தெரியாது ... 
பிரியும் போது நான் உணர்ந்த வலி 
உன்னால் ஏன் உணர முடியவில்லையடி ....

நாடுது நஞ்சு



நினைத்து வாழ்ந்தது ஐந்து வருஷம்.... 
நினைப்பை நிறுத்தசொல்லி 
நீ போன பின்பு பதைக்குது நெஞ்சு...அந்த 
நெஞ்சு தேடுது..... நஞ்சு..... 
நினைப்பை நியமாக்கி நஞ்சைக் 
கொல்லுவோம் வா அன்பானவளே....?!

காதலை பற்றி சொல்வார்கள் இப்படி




ஆர்னிகா நாசார் சொல்கிறார் 
அவன் இறப்புக்கு காரணம் காசென்று 
கே.ஜி . ஜவகர் சொல்கிறார் 
கேளுங்கள் அவன் இறந்தது பழியாக 
பட்டுகோட்டை பிரபாகர் சொல்கிறார் 
பாவம் அவன் பைத்தியமாக்கபட்டு இறந்தானென்று 
இராஜேஷ் குமார் சொல்கிறார் 
இரகசியமான பெண் தொடர்பென்று 
சுபா இப்படி சொல்லுகிறார் 
சுற்றி வந்த வெட்டி ஆசையென்று 
எல்லோருமே இங்கே சொல்கின்றனர் 
என் இறப்புக்கு காரணம் காதலென்று 
இனிமேலாவது புரியுமா இது குற்றமா ? 
இல்லைஇல்லை இது தற்கொலையா ? 
இப்போது அனாதையாக கிடக்கும் 
என்னுடல் அருகே நாய் மோப்பம் பிடிக்கிறது 
நாளை நிச்சயம் சொல்லும் 
நன்றி கெட்ட காதலை பற்றி. 

சங்கீதத்தில் ஒரு சாய்வு நாற்காலி!

Written By KAJANTHAN JS on Saturday 7 January 2012 | 17:28



சூரியனின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் நேற்றைய காற்று முக்கியமானது. இந்த நிகழ்சிக்காக நான் நிறையவே உழைத்திருக்கின்றேன். வெறுமனே ஒலிவாங்கியை ஒயிர்ப்பித்து “ஹலோ யார் பேசுறீங்க, சாப்பிட்டீங்களா, என்ன பாட்டு வேணும்” என்று கேட்டு, இடையில் தேவையோ இல்லையோ கொஞ்சம் சிரித்து வைப்பதோடு நிறைவு பெறும் நிகழ்ச்சியல்ல இது! பாடல்களுக்கிடையில் இலக்கியம் பற்றியும், பாடல்களிலுள்ள இலக்கியம் பற்றியும் பேசிப் பேசி  வளர்த்த நிகழ்ச்சி!
நேற்றைய காற்று – இதயங்களின் ஆறுதலாக இருந்தது.
அதனால்தான் ‘சங்கீதத்தில் ஒரு சாய்வு நாற்காலி’ என்று, அந்த நிகழ்ச்சியை அடைமொழி கொண்டு அழைத்தேன்!

ஒரு காலத்தில் – இடைக்காலப் பாடல்களும் அந்தப் பாடல்களுக்குப் பொருத்தமான கவிதைகளுமாக மட்டும் நேற்றைய காற்று – தனது காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தது. சிலவேளைகளில், வாலியின் பாடல்களுக்கு வைரமுத்துவின் கவிதைகள் என்றும், வைரமுத்துவின் பாடல்களுக்கு மேத்தாவின் கவிதைகள் என்றும்  தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியை தெரியாத்தனமாக ரணகளப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இப்படி ஓடிக்கொண்டிருந்த நேற்றைய காற்றை – வேறு திசைக்குத் திருப்பியோர் வெள்ளையனும் நானும்தான்!
ஏனைய தமிழ் வானொலிகள் – நேற்றைய காற்று நிகழ்சியின் போது, என்ன செய்கின்றன என்று கவலைப்படாமல் எங்கள் திசையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம்.
ஆனாலும், சூரியன் தடைசெய்யப்பட்டு மீண்டும் இயங்க ஆரம்பித்த போது – நேற்றைய காற்று நிகழ்ச்சியை எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்துத் தீவிரமாக யோசிக்க வேண்டியிருந்தது. காரணம், சூரியன் இல்லாத இடைவெளியில் – சில வானொலிகள் நேற்றைய காற்று நேரத்தில் இடம்பெறும் தமது நிகழ்ச்சிகளில் சில புதிய மாற்றங்களைச் செய்திருந்தன. அதில் குறிப்பிடத்தக்கது, சக்கி எப்.எம்.மில் இடம்பெற்ற ‘மாயாவின் ஓட்டோகிராப்’ எனும் நிகழ்ச்சி!
உண்மையாகச் சொன்னால், இந்த நிகழ்ச்சிக்குப் போட்டியாக நேற்றைய காற்றில் ஏதாவது புதிய விடயமொன்றை ஆரம்பித்தேயாக வேண்டுமென்று – கிட்டத்தட்ட சூரியனின் அத்தனை அறிவிப்பாளர்களும் அபிப்பிராயப்பட்டார்கள். நேற்றைய காற்றில் புதிதாக எதையாவது சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நானும் நம்பினேன்! இந்த அவாவுதல்களினால் உருவானதுதான் நேற்றைய காற்றில் இடம்பெற்ற ‘இறவாத காலம்’ என்கின்ற அம்சம்!
‘இது என்னோட டயறிக் குறிப்பு’ என்கின்ற ஆலாபனையோடு ஆரம்பமான இறவாத காலம், மிகக் குறுகிய காலத்திலேயே நேயர்களினதும், எங்கள் அறிவிப்பாளர்களினதும் அபிமான நிகழ்ச்சியாக மாறியது. இதற்கான பிரதிகளை எழுதுவதற்கும், தயாரிப்பு வேலைகளைச் செய்வதற்கும் நான் மிகக் கடுமையாக உழைத்தேன். காதலைப் பற்றி மட்டுமே பேசும் அம்சமாக இறவாத காலத்தை நான் வரையறுத்து வைத்திருந்தேன். ஆனாலும், காதல் எனும் புள்ளியில் நின்று கொண்டே ஏராளமான விடயங்களைத் தொடுவதற்கும் முயற்சித்தேன்!
ஒரு நாள் நேற்றைய காற்றில் ‘இறவாத காலம்’ இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, கலையகத்துக்கு வந்த நேயரொருவரின் தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்தேன்.  பேசியவர் ஓர் இளைஞர். மிக நாகரீகமாகப் பேசினார். அவர் மிகப் பொறுப்புவாய்ந்த பதவியொன்றில் இருப்பவர். காதலின் துயரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த அன்றைய ‘இறவாத காலம்’ தன்னை மிகவும் பாதித்து விட்டதாகச் சொன்னார். தனது கடந்த கால நினைவுகளை அந்த நிகழ்ச்சி கிளறிவிட்டதாகக் கூறினார். சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த அவர் – ஒரு கட்டத்தில் அழுது விட்டார். நான் உறைந்து போனேன்!
அந்த அழுகையை எப்படி வகைப்படுத்துவது என்று – இதுவரை எனக்குப் புரியவேயில்லை! அந்த அழுகைதான் எனது நிகழ்ச்சியின் வெற்றியா? ஒரு வானொலி தனது நேயருக்கு சந்தோசங்களையல்லவா கொடுக்க வேண்டும்? ஆனால், எனது நிகழ்ச்சினூடாக நான் சோகங்களையல்லவா சிருஷ்டித்துக் கொடுத்துள்ளேன்.
உண்மையாகச் சொன்னால், நேற்றைய காற்று போன்ற இரவு நேர நிகழ்ச்சியில் சோகப்பாடல்களை ஒலிபரப்புவதில் எனக்கு உடன்பாடே கிடையாது. துயரமான மனநிலையில், ஆறுதலுக்காக நமது வானொலியைக் கேட்கும் ஒரு நேயருக்கு, நாம் சோகப்பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தால், நிலை என்ன?
இரவில் காதல் ரசம் சொட்டும் சந்தோசமான பாடல்களை ஒலிபரப்புங்கள் என்று – எனது நிர்வாக இயக்குனர் ரேய்னோ சில்வா அடிக்கடி கூறுவார்.  காரணம், ஆயிரம் மன உளைச்சல்களுடனும், சோர்வுகளுடனும் வானொலியைக் கேட்கும் நேயர்களை, நாம் அந்தக் கணங்களிலாவது சந்தோசமாக வைத்திருக்க வேண்டும். நேயர்களின் கவலைகளை நமது நிகழ்ச்சியால் மறக்கடிக்க வேண்டும். குறிப்பாக – இரவு என்பது அமைதியும், தனிமையும் நிறைந்தது என்பதால் வானொலி நிகழ்ச்சிகள் – நேயர்களை எளிதாகவும், ஆழமாகவும் சென்றடைகின்றது.
ஆனால், நமது கருத்து நிலைகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பாற்பட்டு பலவேளைகளில் நாம் – வானொலியில் இயங்க வேண்டியிருக்கிறது. அதனால்தான், நேற்றைய காற்றில் சோகங்களையும், சோகப்பாடல்களையும் சேர்க்க வேண்டியிருந்தது!
இது – இரவாத காலம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு பிரதி. வாசித்துப் பாருங்கள்!
நான் காதலால் கொல்லப்பட்டுக் கிடப்பதாக – நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்!
அந்த மரணம் தற்செயலானதா? அல்லது திட்டமிடப்பட்டதா? என்பது பற்றி – இப்போது ஞாபகமில்லை. ஆனால், ஒரு கொலையை நிகழ்த்திய பரபரப்பேயின்றி காதல்
என் உடலருகே நின்றது.
என் உடலுக்கருகில் நீயும் நின்றாய், ஆனால் என் உடலைக் காட்டி அது நானில்லை என்றாய். கனவைக் கண்டு கொண்டிருந்த நான் பதறிப்போனேன். உன்னை உருகி உருகி காதலித்த என்னை, நான் இல்லை என்று நீ சொன்னதால் – நான் அதிர்ந்து போனேன்.
நீ நேசித்தது  எனது ஆத்மாவை என்றாய். ஆத்மா என்பது வெற்று உடலல்ல என்றாய். என்னை கொலை செய்த காதல் – அனைத்தையும் கேட்டு நின்றது.
அப்படியென்றால் உடல் என்பது நானில்லையா? ஆத்மா என்பது என்னிலிருக்கும் வேறொன்றா? அல்லது ஆத்மாதான் நானா? சிலவேளை, உடலென்பதுதான் நான் என்று எண்ணிக்கொண்டிருப்பது எனது மூட நம்பிக்கையா?
நீ  எனது பெயரைச் சொல்லி அழைத்தாய் – வேறேதோ திசையைப் பார்த்து! அந்தக் கணத்தில் எனது உடல் உன்னை ஏக்கத்துடன் பார்த்ததை நீ கவனிக்கவேயில்லை!
கூடியிருந்தவர்கள் – நிகழ்ந்தது ஒரு விபத்தென்று கூறி, காதலை மன்னித்தார்கள்!
காதல் இன்னுமொரு கொலையை நிகழ்த்தும் தீர்மானத்தோடு அங்கிருந்து மிதந்து சென்றது!
நீ என் ஆத்மாவை அழைத்துக் கொண்டேயிருந்தாய்.
எனது உடல் தனித்துக் கிடந்தது.
அதில் குந்த வந்த ஈக்களை விரட்டிக் கொண்டிருந்தது விதியின் கரம்

ஆப்பு எப்பிடிங்க கண்ணுக்கு தெரியும்??




காதலைப் பற்றி அதிகம் எழுதக்கூடாது என்பது எனது பேனா எனக்கு போட்டு வைத்திருக்கும் ஒரு கண்டிப்பான கட்டளை. அதை மீறியும் பல தடவைகள் எழுத எத்தனிக்கும் பொழுது எனது விரல்கள் கூட அந்த கட்டளையை ஞாபகப் படுத்தும். என்ன செய்வது? நான் அதிகம் இளைஞர்களை நேசிப்பவன். ஆக, இந்த காதல் அவர்களின் ஒரு முக்கியமான அம்சம். அப்படியிருக்க எப்படி அதை நான் முற்று முழுதாக ஒதுக்கி வைப்பது என்பது எனது மனம் பேதலிக்கும் ஒரு விடயம். இருந்தும் அந்த கட்டளையில் அதிகம் கண்டிப்பாக இருந்த எனது மனம் இன்று எனது நண்பன் ஒருவனை நீண்ட நாட்களுக்கு பின் கண்டதும் காதலைப் பற்றி எழுதி விடவேண்டும் என்று எனது மனம் அடம்பிடித்ததை என்னால் மறுக்க முடியவில்லை. ஆகவே மீண்டும் ஒரு காதல் பதிவு. இந்த பதிவை நான் இடுவதற்கு முக்கியமான ஒரு காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால் இப்படியும் நாகரீகமற்ற காதல்களும் நரம்பற்ற காதலிகளும் நமது சமூதாயத்தில் நடமாடுகிறார்கள் என்கின்ற ஒரு ஆச்சரியமூட்டும் செய்தியை நம் இளைஞர்களுக்கு பாடமாக சொல்லிக்கொடுக்கும் ஒரு அனுபவமேயாகும். 

இவன் எனது நீண்டகால காரியாலய நண்பன். ஒன்றாக மன்னாரில் நாங்கள் வேலை செய்த தருணங்களை என்றுமே என்னால் மறந்து விட முடியாது. அப்பொழுது அவனிடம் இருந்தவை ஒரு அப்பாவி சிரிப்பும், ஆனந்தப்பேச்சும், அவனை முற்றுமுழுதாக கட்டிப்போட்டிருந்த அவன் காதலும். அவளும் இவனை அப்படியே காதலித்தாள். இருந்தும் அவள் சரியில்லை என்பதை அவனது சகல நண்பர்களும் அவனுக்கு வேண்டிய அளவு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். ஆரம்பித்த காதலை எப்படி நிறுத்துவது. காதல் அனைத்தையும் மறைத்துவிடும் குருட்டு மந்திரம் என்பது இவனுக்கு மட்டும் என்ன விதிவிலக்கா? ஓகோ என காதல் ஓடியது நான்கு வருடங்கள். இவன் உழைப்பில் வாழ்பவள் அந்த காதலி. வீட்டில் இவன் அம்மா அப்பாவும் இவன் உழைத்த பணத்தை பார்த்தது மிக அரிது. அவள் கொறிக்கும் கடலையில் இருந்து அவள் போடும் உள்ளாடை வரை இவன் பணமே. ஆக, இவன் காதலன் அல்ல. அவள் சட்டரீதியற்ற கணவன். என்ன ஒரே ஒரு குறை அவளிடம் தாலி இல்லை. இந்தளவிற்கு அவர்கள் காதல் ஆகா ஓகோ என்று ஓடிய காலம் அந்த நான்கு ஆண்டுகள்.

இவன் நினைத்தது இவளை கொழும்பு வரை கொண்டுவந்து பெரிய படிப்பு எல்லாம் படிப்பிக்க வேண்டும் என்பது. அதன்படி அவளை, அதுதான் மனைவி போன்ற காதலியை கொழும்பு வரை கொண்டுவந்து சகல செலவுகளையும் பொறுப்பேற்று (அவள் கிட் கார்ட் உட்பட இவள் அனைத்தும் இவன் செலவுகளே..) காதலியை நன்றாக படிப்பிக்க வைத்து நல்ல காதலன் என்கின்ற பெயர் பெற ஆசைப்பட்டவன் இவன். காலங்கள் கடந்தன. மன்னிக்கவும் ஓடின. இவள் கொழும்பில். அவன் பொறுப்பில். ஒரு நாள், மாலை நான்கு மணி. அவளை வெள்ளவத்தை கடலோரம் ஊடாக வீடு வரை கூட்டிச் சென்று இராவுணவு உட்பட சகல செலவுகளையும் பார்த்து, எடுத்து அவளை அவள் தங்கியிருந்த வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு இவன் கிளம்ப தயாரானான். 

'டார்லிங், செலவுக்கு காசு இல்லை..' கையை பிடித்தவாறு கூறினாள் அவள். அதுதான் பாக்கெட் மணி கேக்குறாள் மக்கள்ஸ். அதுக்கு நம்ம ஆளு 

' ஓ.. எவ்வளவு வேணும் டார்லிங்?' 

'ஒரு 2000 போதும்'

'சரி இந்தா...' 
என ஒரு புது 2000 ரூபாய் தாளை வெகு வேகமாய் பாக்கெட்டில் இருந்து எடுத்து அவளிடம் நீட்டிய நண்பன் 'குட் நயிட்' சொல்லி தனது வீடு நோக்கி புறப்பட்டான். 

இரவு 8 மணி. வீடில் இருந்த காதலன் ஒரு முறை அவளை தொலைபேசியில் அழைத்துப் பார்ப்போம் என எண்ணி, அவள் இலக்கத்தை அழுத்தி காதில் வைத்தபோது இவன் காதில் கேட்டது 'நீங்கள் அழைக்கும் இலக்கத்தை அடைய முடியவில்லை..' சரி தொலைபேசி ஆப் இல் இருக்கிறது என எண்ணியவன் கொஞ்சம் நேர இடைவெளி கொடுத்து மீண்டும் 9 மணிக்கு அழைத்த பொழுதும் அதே பதிலையே அவனால் கேட்க முடிந்தது. அவ்வாறே முறையாக 10, 11, 12, 1, 2, 3, 4, என இரவிரவாக தன் காதலியை தொலைபேசியில் அழைக்க முயன்றவனுக்கு கிடைத்த பதில் 'நீங்கள் அழைக்கும் இலக்கத்தை அடைய முடியவில்லை' என்பதே. இரவிரவாக தொலைபேசியில் தேடிய காதலன் மறுநாள் காலையில் அவள் வீட்டிற்கு தொலைபேசி செய்தபொழுது அந்த வீட்டு அம்மா சொன்ன பதில்,

"தம்பி, அவ நேற்று இரவு ஏழு மணிக்கு கடைக்கு போய்டு வாரன் எண்டு போனவ இன்னும் வீட்ட வரல.."

அதிர்ச்சியில் உறைந்த நமது காதலன், அடுத்து தொலைபேசி செய்தது அவளது உற்ற நண்பி ஒருத்திக்கு..

"நான் ரவி பேசுறன், ரீமா எங்க எண்டு தெரியுமா??"

"ஓ, ரவி அண்ணாவா?, அண்ணா நான் சொல்லுறத எண்ணி கவலை படாதீங்க.. நீங்க அவள ஒரு பெர்சனல் கிளாசுக்கு கொண்டுபோய் விட்டீங்களே.. அந்த மாஸ்டர அவ விரும்பி அவரோட நேற்று ஓடி போய்டா.."

"வாட்...????"

"ஆம் அண்ணா, ஒவ்வொரு நாளும் இரவு உங்களோட கதைச்சிட்டு பதினோரு மணில இருந்து காலம ரெண்டு மூணு மணி வரைக்கும் அந்த மாஸ்டரோட போன் கதைப்பா.., அதோட அவட ரெண்டு போனும் மூணு சிம் கார்டும் இருந்திச்சு.. தெரியுமா?.. அந்த மாஸ்டரோட நெடுக வெளில எல்லாம் போவா.. நீங்க ஏன் அண்ணா இப்பிடி அவட ஏமாந்தீங்க??"

சுக்கு நூறாய் உடைந்தவன், இவன் பொறுப்பில் அவளை கொழும்பில் கொண்டுவந்து விட்டதன் காரணமாக இவன் வெள்ளவத்தை காவல் துறையில் சென்று இவளை காணவில்லை என்கின்ற ஒரு முறைப்பாட்டையும் செய்தான். காவல் துறை அவர்களை கண்டுபிடித்து இந்த காதலன் முன்னும் அவள் பெற்றோர்கள் முன்னும் நிறுத்தியபோது தனது புது கணவன் அருகில் குழைந்தபடி நின்றவள் காவல் துறையினருக்கு கொடுத்த இறுதி பதில்,

"இவர நான் லவ் பண்ணினது உண்மை.. ஆனால் இவர் எனக்கு காசு மட்டும் தான் கொடுத்தார்.. அன்பு பாசம் இவைகளை கொடுக்க வில்லை.. அதுதான்.."

"..................."

இந்த கதையை எனது நண்பன் என்னிடம் கூறி முடிக்கும் வரை அமைதியாக இருந்த எனது நா, இறுதியில் உச்சரித்த ஒரே ஒரு வார்த்தை, ஆங்கிலத்தில் எப் (F) இல் தொடங்கி கே (K) யில் முடிந்தது. 

ஆண்களே இந்த நவீன காதலிகள் மட்டில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏமாறக் கூடிய சந்தர்ப்பம் இப்பொழுதெல்லாம் மிக மிக அதிகம். 

பி.கு. இந்த கதை உண்மை சம்பவம் எனினும் இதில் பாவிக்கப்பட்ட பெயர்கள் உண்மையானவை அல்ல. 

காதலைப் பற்றி மேதைகள் வெளிப்படுத்திய கருத்துக்கள்


மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும்
பொழுது மாறாதிருப்பதுதான் காதல்
                   ஷேக்ஸ்பியர் 
என்றும் மாறாத காதல்
பார்த்ததும் வருவதில்லை!
     கிறிஸ்டோர் மார்லோவ் 
காதல் பேய் மாதிரி.எல்லாரும் அதைப் பற்றிப்
பேசுவார்கள். ஆனால், சிலருக்குத்தான் அது தெரியும்.
                    லே ரோச்சிஃபோகால்ட் 
நம்மை இன்னொருவரிடம்
கண்டுபிடிப்பதுதான் காதல்.
      அலெக்ஸாண்டர் ஸ்மித் 
காரணம் இல்லாமல் காதல் வருவதில்லை;
அந்தக் காரணம்தான் தெரிவதில்லை.
         பாஸ்கல் 
மனதால் இருவர் ஒன்றாக இணைவதல்ல காதல்;
           இணைகின்ற இருவருக்கும் இந்த உலகம்
                    ஒன்றாகத் தெரிந்தால்தான் காதல்!
            செயிண்ட் எக்ஸ்யூபெரி 
கடுகளவு நம்பிக்கையே
காதல் பிறப்பதற்குப் போதுமானது!
ஸ்டெந்தால் 
காதல் எங்கு இருக்கிறதோ
அங்குதான் வாழ்க்கை இருக்கிறது
      மகாத்மா காந்தி 
காதலிக்காதவர்கள் என்று யாருமில்லை; தங்கள்
காதலை வெளிப்படுத்தாதவர்கள் வேண்டுமானால்
இருக்கலாம். 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. LoveNeT.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger